என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் 4,922 மையங்களில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு தொடங்கியது
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் தமிழகம் முழுவதும் இன்று குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வில் கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர் போன்ற பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.
10-ம் வகுப்பு தகுதி உள்ளவர்கள் எழுதக்கூடிய இத்தேர்வுக்கு, விண்ணப்பிக்கும் அவகாசம் கடந்த மே மாதம் 24-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, தேர்வுக்கு விண்ணப்பித்த 13 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது.
இந்த தேர்வு எழுத நுழைவுச்சீட்டு, கருமை நிறப் பேனா, ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தி உள்ளது.
இந்தநிலையில், தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வை 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இத்தேர்வினை 13,89,738 விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக் கூடங்களில் எழுதுகின்றனர்.






