ஆடி மாதம் அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு

ஆடி மாதத்தில் பக்தர்கள் வசதிக்காக அம்மன் தரிசன சுற்றுலா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒரு சில நாட்களில் 4 நகரங்களுக்கான அம்மன் சுற்றுலா பயண திட்டம் வகுக்கப்படுகிறது.
ஆடி மாதம் அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு
Published on

சென்னை:

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் செய்தல், சிறப்பு அபிஷேகம் போன்றவற்றை பக்தர்கள் செய்து நிறைவேற்றுவார்கள்.

வருகிற 17-ந்தேதி ஆடி மாதம் பிறக்கிறது. அதனால் அம்மன் பக்தர்கள் இப்போதே தங்கள் பகுதியில் உள்ள கோவில்களில் விழா நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

ஆடி மாதத்தில் பக்தர்கள் வசதிக்காக அம்மன் தரிசன சுற்றுலா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது. சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் இருந்து அம்மன் தரிசன ஒரு நாள் சுற்றுலாவுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

காலையில் இருந்து இரவு வரை அந்த பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். ஒரு நாள் சுற்றுலாவிற்கான கட்டணம், பார்க்கும் இடங்கள் உள்ளிட்ட சுற்றுலா விவரங்கள் திட்டமிடப்படுகிறது.

ஒரு சில நாட்களில் 4 நகரங்களுக்கான அம்மன் சுற்றுலா பயண திட்டம் வகுக்கப்படுகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்ல கட்டணம், காலை மற்றும் மதிய உணவுடன் எவ்வளவு நிர்ணயம் செய்வது, எத்தனை மணிக்கு புறப்பட்டு செல்வது, முடிப்பது போன்றவை இறுதி செய்யப்படும் என்று தமிழ்நாடு சுற்றுலா மேலாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

ஆடி மாதம் முழுவதும் அம்மன் தரிசன சுற்றுலா நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்கான பஸ் வசதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com