திருநின்றவூரில் குடியிருப்பு பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சாலையில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
திருநின்றவூரில் குடியிருப்பு பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்
Published on

ஆவடி:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வப்போது சூறைக்காற்றுடன் கனமழை கொட்டுவதால் பருவமழை காலம் போல் நிலைமை மாறி உள்ளது. இன்று காலையும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் முழுவதும் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்றுமுன்தினம் மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆவடியில் 10 செ.மீட்டர் மழை பதிவானது. தொடர்ந்து ஆவடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மழை வெளுத்து வாங்குகிறது.

இதனால் திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட 16, 17, வார்டுகளில் உள்ள பெரியார்நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகரில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வீடுகளை மழை நீர் வெள்ளமாக குளம் போல் தேங்கிநிற்கிறது.

சாலையில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவமழையின் போது கனமழை கொட்டும் போது இது போன்று தண்ணீர் தேங்குவது வழக்கம்.

ஆனால் தற்போது ஒரு நாள் மழைக்கே தண்ணீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு பகுதியில் தேங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால்பாம்பு தவளை, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் தண்ணீரில் நீந்தி வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்து வருகின்றன. இதானல் மழை நீர் சூழ்ந்து நிற்கும இடங்களில் வசிப்பவர்கள் அச்சத்துடன் இருக்கும் நிலை உள்ளது.

பெரியார்நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகர் பகுதிகள் திருநின்றவூர் ஈசா ஏரியை ஒட்டி உள்ள தாழ்வான பகுதி ஆகும். எனவே சிறிய மழைக்கே இப்பகுதி தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சிஅளிக்கிறது. எனவே இந்த பகுதியில் மழைநீர் வெளியேற நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஆவடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது இதனால் பாரதி தாசனன் தெரு, கம்பர்தெரு உள்பட பல தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. பெரியார்நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகர் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதி அடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. பல தெருக்களில் வெள்ளம் காட்சியளிக்கிறது. இப்பகுதியில் பெரிய ஏரி உள்ளது. ஏரிநீரும் கசிந்து தெருக்களில் தேங்கிவிடுகிறது. திருநின்றவூர் நகராட்சி நிர்வாகம் உடனே மழைநீரை வெளியேற்றி இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும். இப்போதே சிறி மழைக்கு இந்த நிலைமை என்றால் பருவழையின் போது கடும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகும். இதனை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com