தேவர் நினைவிடத்தில் யாகசாலை பூஜைகள்- பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

இன்று காலை தேவர் நினைவிடத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
Published on

கமுதி:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா நேற்று (28-ந் தேதி) தொடங்கி நாளை (30-ந் தேதி) வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று ஆன்மீக விழாவாகவும், 2-ம் நாளான இன்று அரசியல் விழாவாகவும், நாளை குரு பூஜை விழாவாகவும் அனுசரிக்கப்படுகிறது.

முதல் நாளான நேற்று தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலை அலங்கரிக்கப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டிருந்தது.

தேவர் நினைவிடத்தில் உள்ள விநாயகர், பாலசுப்பிரமணியர் சன்னதிகளுக்கு 22 ஆண்டுகளுக்கு பின் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் அரசியல் கட்சியினர் எம்.எல்.ஏ. க்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தேவர் நினைவிட நிர்வாக பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் பழனி, சத்தியமூர்த்தி, தங்கவேல் ஆகியோர் முன்னிலையில் அன்னதானம் நடந்தது.

இரவு 8 மணி அளவில் முத்துராமலிங்க தேவரின் ஐம்பொன் சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்திற்கு முன்பாக சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

2-ம் நாளான இன்று அரசியல் விழாவாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று காலை தேவர் நினைவிடத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபாடு செய்தனர்.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான குருபூஜை விழா நாளை (30-ந் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தேவர் நினைவிடத்தில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

அவர்கள் எந்தெந்த நேரத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என போலீசார் நேரம் ஒதுக்கீடு செய்துள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும் என்று போலீசார் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.

குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com