பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பிக்க தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற கொள்ளையன்

அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வீட்டின் கதவை இழுத்து பூட்டினர்.விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் திருடனை மடக்கி பிடித்தனர்.
பொதுமக்கள் பிடியில் சிக்கிய இஸ்மாயில்.
பொதுமக்கள் பிடியில் சிக்கிய இஸ்மாயில்.
Published on

ஊத்துக்குளி:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன் பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது40). இவர் தனது மனைவி காயத்ரி, தாயார் நாகம்மாள் (60) மற்றும் 2 குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். வடிவேல் மற்றும் காயத்ரி இருவரும் பனியன் நிறுவனத்தில் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

நாகம்மாள் அப்பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று வடிவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார். மாலை வேலைக்கு சென்ற தனது தாயாரை அழைத்து வருவதற்காக வீட்டை பூட்டிவிட்டு மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார்.பின்னர் தனது தாயாருடன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம ஆசாமி ஒருவன் வீட்டுக்குள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து திருடன்... திருடன்... என வடிவேல் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதையடுத்து வீட்டின் கதவை இழுத்து பூட்டினர். மேலும் ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கதவை பூட்டியதால் உள்ளே சிக்கிய திருடன் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்தான். பொதுமக்களிடமிருந்து தப்பிக்க வீட்டில் இருந்த சேலையை எடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றான்.

இதனிடையே அங்கு விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் திருடனை மடக்கி பிடித்தனர். அவனிடம் விசாரணை நடத்திய போது திருப்பூர் பலவஞ்சிபாளையத்தைச்சேர்ந்த முஸ்தபா மகன் இஸ்மாயில் (30) என்பது தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கொள்ளையில் ஈடுபட முயன்ற வாலிபர் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பிக்க தூக்கு ப்போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com