நாக்பூர் விமான நிலையத்தில் உயிரிழந்த விமானி சென்னையை சேர்ந்தவர்

விமானம் புறப்பட ஒரு மணி நேரம் இருந்த நிலையில் விமானி மாரடைப்பால் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஒரு வாரத்தில் 2 விமானிகள் இறந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாக்பூர் விமான நிலையத்தில் உயிரிழந்த விமானி சென்னையை சேர்ந்தவர்
Published on

சென்னை:

நாக்பூர் விமான நிலையத்தில் இருந்து புனேவுக்கு நேற்று மதியம் 1 மணிக்கு பயணிகள் விமானம் புறப்பட இருந்தது. அந்த விமானத்தை விமானி மனோஜ் சுப்பிரமணியம் (வயது40) என்பவர் இயக்க இருந்தார்.

மதியம் 12 மணியளவில் விமான நிலையத்தில் புறப்பாடு வாசல் பகுதியில் மனோஜ் சுப்பிரமணியம் நின்ற போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் விமான ஊழியர்கள் அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விமானம் புறப்பட ஒரு மணி நேரம் இருந்த நிலையில் அதனை இயக்க இருந்த விமானி மாரடைப்பால் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இறந்து போன விமானி மனோஜ் சுப்பிரமணியத்தின் சொந்த ஊர் சென்னை ஆகும். அவரது உடல் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மனோஜ் சுப்பிரமணியம் இயக்க வேண்டிய விமானத்தில் 214 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். இதைத் தொடர்ந்து சுமார் 15 நிமிடம் தாமதமாக மாற்று விமானி மூலம் அந்த விமா னம் புறப்பட்டு சென்றது.

இது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், நாக்பூரில் எங்களது விமானி உயிரிழந்ததை எண்ணி வருந்துகிறோம். விமான நிலையத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது துரதிருஷ்ட வசமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரு வாரத்தில் 2 விமானிகள் இறந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வியாழக்கிழமை டெல்லியில் இருந்து தோகா சென்ற பயணிகள் விமானத்தில் மூத்த விமானி உடல்நலக் குறைவால் உயிரிழந்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com