

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் காட்டுராஜா என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடும் 9 வயது சிறுமிகள் 3 பேர் மற்றும் 8 வயது சிறுமி ஆகியோருக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து, அவரது வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதை அடுத்து போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புளியங்குடியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று Good Touch Bad Touch குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் தலைமை ஆசிரியர், பள்ளி குழந்தைகளிடம் உங்களது உடலில் உங்களது வீட்டு நபர்களை தவிர யாராவது உங்கள் உடலில் கை வைத்தால் பள்ளியிலோ, அல்லது வீட்டில் உள்ள பெற்றோர்களிடமோ உடனே தகவல் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அப்போது 4 சிறுமிகள், தலைமை ஆசிரியரிடம் சென்று, வீட்டின் அருகே விளையாடும் போது, ஒருவர் Bad Touch செய்ததாக கூறியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் தகவல் கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து நான்கு குழந்தைகளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் டாஸ்மாக் ஊழியரான காட்டு ராஜாவை (48) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.