நீர்வரத்து சரிவால் பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் காவிரி ஆறு

கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பெய்யாததால் காவிரியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டி வருகிறது.
ஐவர்பாணியில் தண்ணீர் இன்றி வறண்டு பாறைகள் தெரிவதை படத்தில் காணலாம்.
ஐவர்பாணியில் தண்ணீர் இன்றி வறண்டு பாறைகள் தெரிவதை படத்தில் காணலாம்.
Published on

தருமபுரி:

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு 290 கிலோ மீட்டா் பயணித்து தமிழகத்தில் பிலிகுண்டுலு பகுதியில் நுழைந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆறு வழியாக மேட்டூர் அணையை சென்றடைகிறது.

மேட்டூர் அணையில் இருந்து சுமார் 12-க்கும் மேற்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பயன்பாட்டுக்கும் காவிரி நீர் பயன்படுகிறது.

ஆண்டு தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும்.

கர்நாடக மாநிலத்தில் மழை பெய்ய தொடங்கினால் அங்குள்ள கபினி, ஹேரங்கி, ஹேமாவதி, ஆகிய அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை சென்றடையும்.

இந்த ஆண்டு பருவ மழை தொடங்காத காரணத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்றைய நிலவரப்படி வினாடிக்கு 300 கன அடியாக குறைந்துள்ளது.

நீர்வரத்து குறைந்ததன் காரணமாக பறந்து விரிந்த காவிரி ஆறு, சிறு ஓடை போல சுருங்கி தண்ணீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நின்று காட்சி அளிக்கிறது.

தண்ணீர்வரத்து இல்லாத காரணத்தால் ஆற்றுப்பகுதி பாறைகளாக காட்சியளிக்கிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி முதல் 2.85 கன அடி வரை தண்ணீா் ஒகேனக்கல் பகுதியை கடந்து சென்றது.

தற்போது தண்ணீா் வழிந்தோடிய பகுதிகள் வறண்டு பாறை முகடுகளாக காணப்படுகிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கூட்டு குடிநீர் ஏற்றும் பகுதிக்கு தண்ணீர் வராததால் மணல் மூட்டைகளை அடுக்கி சிறு ஓடைகளாக ஓடும் தண்ணீரை தேக்கி நீர் ஏற்றப்படுகிறது.

400 கன அடியில் இருந்து 300 கன அடியாக நீர் வரத்து குறைந்துள்ளது.

கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என அம்மாநில துணை முதலமைச்சரும், நீர்வளத் துறை அமைச்சருமான சிவகுமார் தெரிவித்து வருகிறார்.

தற்பொழுது காவிரி ஆற்றில் குறைந்து வரும் நீரால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும்.

உடனடியாக தமிழக, மத்திய அரசு மற்றும் கர்நாடகா அரசிடம் பேசி மத்திய அரசின் நதி நீர் ஆணையம் பிறப்பித்துள்ள ஆணையின் படி தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பெய்யாததால் காவிரியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

இந்த ஆண்டு நீர்வரத்து இல்லாததால் ஒகேனக்கல் காவிரி ஆறு வறண்டு வருகிறது. ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டி வருகிறது.

கடந்தாண்டு ஜூலை 15-ம் தேதி காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் முதல் 2.85 கனஅடி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com