அறந்தாங்கி, அரியலூர் பகுதியில் 3 மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை

குவாரில் எந்த அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்று டிரோன் மூலமாக ஆய்வில் ஈடுபட்டனர்.துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெருநாவலூர் அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய காட்சி.
பெருநாவலூர் அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய காட்சி.
Published on

அறந்தாங்கி:

தமிழக அரசின் நீர் வளத்துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம் ஆற்று மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மணல் வாங்குபவர்களுக்கு அரசு சார்பில் இ-ரசீது வழங்கப்படுகிறது.

இதில் முறைகேடு நடப்பதாகவும், உரிய நடைமுறையை பின்பற்றாமல் சட்டவிரோதமாக மணல் விற்கப்படுவதாகவும், இதனால் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

இதை தொடர்ந்து கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று ஒரே நேரத்தில் தீவிர சோதனை நடத்தினர். மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

அறந்தாங்கி தாலுகா பெருநாவலூர் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் குவாரியை குத்தகைக்கு எடுத்து செயல்பட்டு வந்தார். தமிழகம் முழுவதும் இவர் எடுத்துள்ள குவாரி மற்றும் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையிட்டு ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பெருநாவலூர் குவாரியில் இன்று அமலாக்கத்துறையினர் 10 பேர் கொண்ட குழுவினர், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அரசு அனுமதித்த 4 ஆயிரத்து 400 கனமீட்டர் அளவு வரை மணல் எடுக்கப்பட்டுள்ளதா அல்லது கூடுதலாக எடுக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக சென்னை ஐ.ஐ.டி. யில் இருந்து தொழில்நுட்ப குழுவினரையும் அமலாக்கதுறையினர் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் நவீன கருவிகள் மூலம் மணல் அள்ளப்பட்டதை கணக்கிட்டனர்.

இதேபோல அரியலூர் மாவட்டம் தளவாய் அருகே உள்ள சிலுப்பனூர் மணல் குவாரி, சேந்தமங்கலம் வெள்ளாற்றில் உள்ள மணல் குவாரிகளிலும் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். குவாரில் எந்த அளவுக்கு மணல் அள்லப்பட்டுள்ளது என்று டிரோன் மூலமாக ஆய்வில் ஈடுபட்டனர். துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com