தொழிற்சாலையில் மோதலை விசாரிக்க சென்ற போலீசாரை தாக்கிய வடமாநில வாலிபர்கள்

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த ஆயதபூஜை விழாவில் தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. தொழிலாளர்களையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
தொழிற்சாலையில் மோதலை விசாரிக்க சென்ற  போலீசாரை தாக்கிய வடமாநில வாலிபர்கள்
Published on

அம்பத்தூர்:

அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் சாலையில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். தொழிற்சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த ஆயதபூஜை விழாவில் தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து இதுபற்றி விசாரிக்க அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ்காரர்கள் ரகுபதி, ராஜ்குமார் ஆகியோர் நேரில் சென்றனர். அப்போது போலீசாரிடம் கடும்வாக்குவாதத்தில் ஈடுபட்டு சுற்றி வளைத்து தாக்கினர். இதனால் போலீசார் அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த தாக்குதல்தொடர்பாக வடமாநில தொழிலாளர்கள் ரோஷன்குமார், பிளாக் தாஸ், பிண்டு, ராம்ஜித், சுராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதற்கிடையே போலீஸ்காரர் ஒருவரை வடமாநில வாலிபர்கள் சுற்றி வளைத்து தாக்கும் வீடியோ தற்போது சமூகவலை தளத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் விசாரணை நடத்த வந்த போலீஸ்காரரை ஏராளமான வடமாநில வாலிபர்கள் கையில் கம்பு, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி நிற்கின்றனர். அப்போது சிலர் போலீஸ்காரரை தாக்கி விரட்டி அடிப்பதும் பின்னர் வடமாநில தொழிலாளர்கள் கும்பலாக விரட்டி செல்வதும் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சியை அங்குள்ள தொழிலாளி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார்.

இந்த வீடியோ காட்சியை வைத்து தாக்குதலில் ஈடுபட்ட மற்ற தொழிலாளர்களையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com