நெல்லையில் அரசு சார்பில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை

எங்களுக்கெல்லாம் ஆசிரியராக நான் பார்த்தவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
நெல்லையில் அரசு சார்பில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை
Published on

நெல்லை:

வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளையொட்டி நெல்லை டவுன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு மாலை அணிவித்தார்.

இதில் கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, நெல்லை சப்-கலெக்டர் ஷேக் அயூப், பாளை யூனியன் சேர்மன் தங்கபாண்டியன், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி, தாசில்தார் வைகுண்டம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய சுதந்திரப் போராட்ட வீர வரலாற்றில் மறைக்க முடியாத, மறக்க முடியாத ஒரு பெயராக திகழ்ந்தது வ.உ.சி. அவரது 150-வது பிறந்தநாளில் பல்வேறு சிறப்புகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தார்.நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள மணிமண்டபத்தை சிறப்புற அழகு செய்ய ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மணிமண்டபத்தை மேம்படுத்திடும் வகையிலும், இளைஞர்களுக்கு உந்து சக்தியாக போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் பகுதிகளாக மணிபண்டபங்கள் திகழ வேண்டும் என்பதற்காக போட்டி தேர்வில் ஈடுபடும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக சிறப்பு செய்துள்ளார்.

எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் விடுதலை போராட்ட வீரர்களையும், அவர்களது தியாகங்களையும் போற்றி பாராட்டும் அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது. எங்களுக்கெல்லாம் ஆசிரியராக நான் பார்த்தவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரிடம் பாடம் பெற்ற மாணவர்களாக அத்தனை பேரும் நாங்கள் இங்கு உள்ளோம்.

அவர் தனக்காக இல்லாமல், பிறருக்காக தமிழ் சமுதாயத்திற்காக ஆசிரியராக திகழ்ந்தவர். எத்தனையோ பேரை உருவாக்கியவர்கள் ஆசிரியர்கள். ஒவ்வொரு ஆசிரியரை பற்றியும் ஒவ்வொருவருக்கு நல்ல நினைவுகள் பல உண்டு. இந்த தருணத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com