நாளை திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

அதிக தொழிலாளர்களை கொண்ட அரசு நிறுவனமாக அரசு போக்குவரத்து கழகம் இயங்கி வருகிறது.ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு எவ்வித பணப் பலனும் 13 மாதமாக வழங்கப்படவில்லை.
நாளை திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
Published on

சென்னை:

தமிழ்நாட்டில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் டிரைவர், கண்டக்டர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் என 1.35 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.

அதிக தொழிலாளர்களை கொண்ட அரசு நிறுவனமாக அரசு போக்குவரத்து கழகம் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்கள் கிடைக்கவில்லை. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு 96 மாத அக விலைப்படி வழங்காமல் இருப்பதால் அதனை உடனே வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இது தவிர பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு எவ்வித பணப் பலனும் 13 மாதமாக வழங்கப்படவில்லை அதனை வழங்க வேண்டும், 4 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தின.

அரசு செவி சாய்க்காததால் கடந்த 19-ந் தேதி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி, பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கின.

இதையடுத்து பஸ் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தவிர்க்க அமைச்சர் சிவசங்கர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். கடந்த 5-ந்தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அகவிலைப்படி உயர்வு வழங்குதல், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.

இது தொடர்பாக நிதித்துறையுடன் ஆலோசிக்க வேண்டியிருப்பதால் பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் தொடர்ந்து இரண்டு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் (9-ந்தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அதனை தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தது.

அதனை தொடர்ந்து இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இன்றைய பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும் திட்டமிட்டபடி நாளை (9-ந்தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்னன.

போராட்டம் காரணமாக 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படாது. இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com