திட்டக்குடி அருகே சிலை கடத்தல் வழக்கில் பா.ம.க. பிரமுகர் கைது

நடராஜர் சிலையை விற்க ஒரு சிலர் விலை பேசி வருவதாக சமூக வளைதளங்களில் பரவியது. பெரியசாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
திட்டக்குடி அருகே சிலை கடத்தல் வழக்கில் பா.ம.க. பிரமுகர் கைது
Published on

திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நடராஜர் சிலையை விற்க ஒரு சிலர் விலை பேசி வருவதாக சமூக வளைதளங்களில் பரவியது இதனைப் பார்த்த கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், ஆவினங்குடி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு உத்தரவிட்டார். அவரின் உத்தரவின் பேரில் திட்டக்குடி இன்ஸ்பெக்டர் சீனிபாபு, ஆவினங்குடி சப்-இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் ஆவினங்குடி, திட்டக்குடி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இத்தகவலை சமூக வளைதளங்களில் வெளியிட்டவர்களை தொடர்பு கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வேப்பூரை அடுத்த காஞ்சிராங்குனத்தை சேர்ந்த பெரியசாமியின் (வயது 42) உறவினர்கள் இதனை வெளியிட்டது தெரியவந்தது. உடனடியாக பெரியசாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

அவர் தந்த தகவலின் பேரில் ஆவினங்குடி ராமர் (33), வேப்பூர் அடுத்த பாசார் ராமச்சந்திரன் (33), மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்த ராஜசூரியன்பேட்டையை சேர்ந்த சரவணன் (35) ஆகியோரை பிடித்தனர்.

இதில் தொழுதூர் அடுத்த அதர்நத்தத்தை சேர்ந்த வேல்முருகன் தன்னிடம் நடராஜர் சிலை உள்ளது. இதை விற்றுக் கொடுத்தால் பங்கு தருவதாக ராமர், சரவணனிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிலை வாங்குவது போல வேல்முருகனை ஆவினங்குடிக்கு ராமர் வரவழைத்தார். அப்போது ராமர், சரவணன் மற்றும் அவர்களது நண்பர்கள் வேல்முருகனை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த சிலையை பறித்து ராமர் வீட்டி பதுக்கிவிட்டனர்.

இச்சிலையினை பெரியசாமி, ராமச்சந்தின் ஆகியோரிடம் விற்க ராமர், சரவணன் முயற்சித்தனர். அப்போது நடராஜர் சிலையை பெரியசாமி படம் பிடித்து அவரது உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். பெரியசாமியின் உறவினர்கள் நடராஜர் சிலை விற்பனைக்கு உள்ளது என்று சமூக வளைதளங்களில் பதிவிட்டனர். இது வைரலாக பரவியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மேற்கண்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடமிருந்த நடராஜர் சிலையை பறிமுதல் செய்தனர். இந்த சிலை ஐம்பொன்னால் ஆன சிலையா? என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த வழக்கின் முக்கிய நபரான பா.ம.க. பிரமுகர் வேல்முருகனை போலீசார் தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்தனர். அப்போது திட்டக்குடி அடுத்த அரங்கூரில் வேல்முருகன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு விரைந்த போலீசார் பா.ம.க. பிரமுகர் வேல்முருகனை இன்று காலை கைது செய்தனர். இந்த சிலை எங்கிருந்து திருடப்பட்டது? அல்லது வேறு யாராவது கொடுத்து விற்க சொன்னார்களா? எப்படி கிடைத்தது? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் பா.ம.க. பிரமுகர் வேல்முருகனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com