கண்ணீர் மல்க விடைகொடுத்த உறவினர்கள்- மாணவி ஸ்ரீமதியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

போலீசாரின் மூன்றடுக்கு பாதுகாப்புடன் மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.மகள் ஸ்ரீமதிக்கு தந்தை இறுதி சடங்குகளை செய்தார்.
கண்ணீர் மல்க விடைகொடுத்த உறவினர்கள்- மாணவி ஸ்ரீமதியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடல் இன்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் அவரது சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

மாணவியின் உடல் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், மாணவியின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டதை அடுத்து ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் சி.வி.சண்முகம், எம்எல்ஏ உள்ளிட்டோர் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மாணவியின் உடல் இன்று மாலை 6 மணியளவில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்த நிலையில், நண்பகலிலேயே அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், போலீசாரின் மூன்றடுக்கு பாதுகாப்புடன் மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அப்பகுதியில் உள்ள ஊர் மக்கள் சாலையெங்கும் நின்று கண்ணீர் அஞ்சலியுடன் பிரியாவிடை கொடுத்தனர்.

பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்ய ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவியின் உடல் சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், மகள் ஸ்ரீமதிக்கு தந்தை இறுதி சடங்குகளை செய்தார். பின்னர், மாணவியின் உடல் அவரின் பாடப்புத்தகங்களுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com