30 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் கைதான தமிழ் ஆசிரியர் சஸ்பெண்டு

அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று விடுதி அறையில் தங்க வைத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் சிறுமிகள் என்பதால் வழக்கு கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
30 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் கைதான தமிழ் ஆசிரியர் சஸ்பெண்டு
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே திருவக்கரை பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திருவக்கரை மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த சுமார் 350 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

இங்கு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய், மகளை மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தார்.

அப்போது அந்த மாணவி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் புத்தகத்துக்குள் செல்போனை மறைத்து வைத்து ஆபாச வீடியோவை பார்க்குமாறு திருவக்கரை பள்ளி தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன் (வயது 38) வலியுறுத்தியதாகவும், தொடர்ந்து இதுபோல் தொல்லை அளித்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மேலும் சில மாணவிகளுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார்கள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய், அவரது கணவர் மற்றும் உறவினரிடம் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இந்த தகவல் பள்ளியில் பரவியதையடுத்து தமிழ் ஆசிரியரின் லீலைகள் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் மேலும் சிலர் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.

இதை கேட்டு ஆவேசமடைந்த மாணவிகளின் உறவினர்கள், பள்ளியில் இருந்த தமிழ் ஆசிரியர் மகேஸ்வரனை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை வானூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ஆசிரியர் மகேஸ்வரன், விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், கடந்த ஆண்டுதான் திருவக்கரை பள்ளியில் பணிக்கு சேர்ந்ததும் தெரியவந்தது. இவரது மனைவியும் அரசு பள்ளி ஆசிரியை ஆவார்.

பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க அழைத்துச்சென்று, மாணவிகளுக்கு மகேஸ்வரன் பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மகேஸ்வரன் மீது 7 மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். 30-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் சிறுமிகள் என்பதால் இந்த வழக்கு கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. கோட்டக்குப்பம் துணை போலீஸ்சூப்பிரண்டு சுனில் தலைமையிலான போலீசார் ஆசிரியர் மகேஸ்வரனை போக்சோவில் கைது செய்தனர்.

இந்த நிலையில் போக்சோவில் கைது செய்யப்பட்ட தமிழ் ஆசிரியர் மகேஸ்வரனை தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்டு) செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உத்தரவிட்டுள்ளார். மாணவிகளுக்கு தமிழ் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் திருவக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com