போக்குவரத்து விதிகளை மீறி செல்பவர்களுக்கு 'ஆப்பு' வைக்கும் கண்காணிப்பு கேமராக்கள்

விதிமீறலில் ஈடுபட்ட சில நிமிடங்களிலேயே அபராத தொகை செல்போனில் வருவதை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.100 ரூபாய் என்ற அளவில் இருந்த அபராத தொகை ரூ.1000-மாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைப்பார்த்து தான் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறார்கள்.
போக்குவரத்து விதிகளை மீறி செல்பவர்களுக்கு 'ஆப்பு' வைக்கும் கண்காணிப்பு கேமராக்கள்
Published on

சென்னை:

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் கூடுதல் அபராதம் விதிக்கும் நடைமுறை கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், ஒரு வழிப்பாதையில் பயணம் செய்பவர்கள் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்காக விதிக்கப்பட்டு வந்த அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.100 ஆக இருந்த அபராத தொகை தற்போது ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் முக்கிய சந்திப்புகளில் நின்றபடி அபராதம் வசூலித்து வருகிறார்கள். அதேநேரத்தில் கேமராக்கள் மூலமும் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

'டிராபிக் ரெகுலேசன் அப்சர்வேஷன் மண்டலம்' என்ற பெயரில் தானியங்கி கேமராக்களே விதிமீறலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து கம்ப்யூட்டர் மூலமாக அபராதம் விதிக்கும் நடைமுறை ஏற்கனவே அமலில் இருந்து வருகிறது.

இதன்படி அண்ணாநகர் பகுதியில் சுமார் 60 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வேப்பேரி போக்குவரத்து போலீஸ் எல்லைக்குட்பட்ட புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில் அருகில் உள்ள வெல்கம் ஓட்டல் சந்திப்பிலும் இந்த வகை கேமரா அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த பகுதிகளில் விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராத தொகை ஆன்லைன் மூலமே விதிக்கப்பட்டு வருகிறது.

விதிமீறலில் ஈடுபட்ட சில நிமிடங்களிலேயே அபராத தொகை செல்போனில் வருவதை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.

ஏனென்றால் 100 ரூபாய் என்ற அளவில் இருந்த அபராத தொகை ரூ.1000-மாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைப்பார்த்து தான் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறார்கள்.

அண்ணாநகர் பகுதியில் இந்த கேமராக்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன. அண்ணாநகர் போலீஸ் நிலைய சந்திப்பு, ரவுண்டானா, சாந்தி காலனி சந்திப்பு, திருமங்கலம், முகப்பேர் ரோடு சந்திப்பு, 100 அடி ரோடு மற்றும் 18-வது மெயின் ரோடு சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு இந்த ஆன்லைன் அபராதம் அதிக அளவில் விதிக்கப்பட்டு வருகிறது.

எனவே போலீசார் தான் இல்லையே... என்ற தைரியத்தில் சிக்னலை மீறிச்செல்பவர்கள், ஒரு வழிப்பாதையில் செல்பவர்கள், நிறுத்த கோட்டை தாண்டி நிற்பவர்கள் ஆகியோருக்கு 'ஆப்பு' வைக்கும் வகையில் இதுபோன்ற அபராதம் கண்காணிப்பு கேமராக்கள் விதித்து வருகின்றன.

எனவே இந்த அபராத தொகையை வசூலிக்க சென்னை கமிஷனர் ஆபீசில் தனி குழுவும் ஏற்படுத்தப்பட்டு அபராதம் வசூலிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com