ஓணம் பண்டிகைக்காக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம்

பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்தபோதும் அதிகளவு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.இன்று ஒரேநாளில் மட்டும் ரூ.5 கோடிக்கு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டன.
ஓணம் பண்டிகைக்காக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம்
Published on

ஒட்டன்சத்திரம்:

கேரளாவில் பிரசித்திபெற்ற ஓணம் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதேபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மலையாள மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

கேரளாவிற்கு அதிகளவு காய்கறிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து அனுப்பப்படுவது வழக்கம். மார்க்கெட்டில் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் நிலையில் இன்று ஓணம் பண்டிகைக்காக மார்க்கெட் செயல்பட்டது.

இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து காய்கறிகள் அதிகளவு கொண்டுவரப்பட்டன. பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்தபோதும் அதிகளவு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை என ஆதங்கம் தெரிவித்தனர்.

இன்று ஒரேநாளில் மட்டும் ரூ.5 கோடிக்கு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டன. வழக்கமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து 70 லாரிகளில் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படும். இன்று 300 லாரிகளில் காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டது.

சேம்பைகிழங்கு கிலோ ரூ.25, பீட்ரூட் ரூ.10, கத்தரிக்காய் ரூ.15 முதல் ரூ.20, புடலங்காய் ரூ.12, வெண்டை ரூ.20, பாகற்காய் ரூ.18, சுரக்காய் ரூ.7 முதல் ரூ.15, பூசணிக்காய் ரூ.7, அவரை ரூ.35 முதல் ரூ.55, கொத்தவரை ரூ.18, மரமுருங்கை ரூ.9, கரும்பு முருங்கை ரூ.10, பச்சை மிளகாய் ரூ.32, பல்லாரி ரூ.18, சின்னவெங்காயம் ரூ.35 முதல் ரூ.50, தக்காளி ஒரு பெட்டி ரூ.300 முதல் ரூ.500 என கொள்முதல் செய்யப்பட்டது.

கடந்த 2 நாட்களாக தக்காளி ஒரு பெட்டி ரூ.300 வரையிலேயே கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இன்று தேவை அதிகரிப்பின் காரணமாக ரூ.500 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இது விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களுக்கு ஒட்டன்சத்திரத்தில் இருந்து காய்கறிகள் அனுப்பி வைக்கப்படும் என்றும், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையில் விடுமுறை எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக பல்வேறு ஊர்களில் இருந்து விவசாயிகள் அதிகளவு காய்கறிகளை கொண்டு வந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com