திண்டிவனம் அருகே கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான புதுவை மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 பேர் கைது

எஸ்கார்ட்போல் ஒருவர் இருசக்கர வாகனத்தில் காருக்கு முன்னே சென்றது தெரியவந்தது.பறிமுதல் செய்யப்பட்ட மதுபானம், கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மதிப்பு சுமார் 10 லட்சத்துக்கு மேலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டிவனம் அருகே கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான புதுவை மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 பேர் கைது
Published on

திண்டிவனம்:

தமிழ்நாடு அமலாக்கப் பிரிவு, மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின் பேரில், மத்திய நுண்ணறிவுப் பிரிவு விழுப்புரம் மண்டல உதவி ஆய்வாளர் இனாயத் பாஷா தலைமையில், தலைமை காவலர்கள் இளந்திரையன், கவிராஜா, மகாமார்க்ஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த செண்டூர் அருகில் வாகன சோதனை செய்தனர்.

அப்போது புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 4128 மதுபாட்டில்களை (725 லிட்டர்) காரில் புதுச்சேரியில் இருந்து சூனாம்பேட்டைக்கு காரில் கடத்தி வருவதை அறிந்தனர். அந்த காரை அவர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.

அப்போது போலீசார் மீது மோதுவது போல் வந்த அந்த காரை மடக்கி பிடித்தனர். காரில் சோதனை செய்தனர். அதில் புதுவை மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. எஸ்கார்ட்போல் ஒருவர் இருசக்கர வாகனத்தில் காருக்கு முன்னே சென்றது தெரியவந்தது.

அந்த இருசக்கர வாகனம் மற்றும் காரை மடக்கி பிடித்த போலீசார் அவர்களை திண்டிவனம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் புதுவை மாநிலம் பாகூர் பகுதியை சேர்ந்த கதிரவன் என்பதும் அவரது காரை ஓட்டி வந்தவர் வானூர் அடுத்த வாழப்பட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா என்பதும் தெரியவந்தது.

இந்த மதுபாட்டில்கள் புதுச்சேரியில் இருந்து சூனாம்பேடு பகுதியை சேர்ந்த ரகு என்பவருக்கு கொண்டு செல்லப்பட்டது என தெரிய வந்தது.

2 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபானம், கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மதிப்பு சுமார் 10 லட்சத்துக்கு மேலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com