பிரதமருக்கு தினமும் கடிதம் அனுப்பும் நிறைமாத கர்ப்பிணி பெண்

நான் மக்கள் பிரச்சினைகளுக்காக பிரதமருக்கு கடிதங்களை எழுதி அனுப்பியுள்ளேன்.பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பி வரும் கிருத்திகாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.
பிரதமருக்கு தினமும் கடிதம் அனுப்பும் நிறைமாத கர்ப்பிணி பெண்
Published on

கோவை:

மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் பொதுமக்கள் தங்களின் தேவைகள் குறித்து, கடிதம் எழுதுவதும், மனு அனுப்புவதும் அரசியல் கட்சிகள், இயக்கங்களின் அன்றாட செயல்பாடுகளில் ஒன்று.

கோவையை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தினமும் பிரதமர் மோடிக்கு கோரிக்கை கடிதம் எழுதி அனுப்பி வருகிறார்.

கோவை காந்தி மாநகரை சேர்ந்தவர் பழனிசாமி. அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிருத்திகா. இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இவர் கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி மகளிர் தினத்தன்று பிரதமர் மோடிக்கு முதல் கடிதம் எழுதினார். அதில் சமையல் எரிவாயு விலை அதிகமாக உள்ளது. அதனை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் அனுப்பினார்.

2-வதாக பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குதல் கோரி மனு எழுதியிருந்தார்.

தொடர்ந்து ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்தல், நிர்பயா அமைப்பு நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிற்கு அதிகமாகதருவது, பி.எஸ்.என்.எல் 5 ஜி சேவை நிறுவுவது, தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்துவது தொடங்கி தற்போது நடந்த இஸ்ரேல்-காசா போர் வரை கிருத்திகா கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த மார்ச் 8-ந் தேதியில் இருந்து இதுவரை 264 கோரிக்கை மனுக்களை எழுதி பிரதமருக்கு அனுப்பியுள்ளார். சட்டநாளான நேற்று தனது 264-வது கடிதத்தை எழுதினார்.

இதில் இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் அடிப்படையில் கடமைகள் தெரியப்படுத்தி, அதற்கான விழிப்புணர்வவை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை மனுவை கடிதமாக எழுதி பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி உள்ளார்.

நாட்டு மக்களின் பல்வேறு பிரச்சினைகளை மையப்படுத்தி தொடர்ந்து இவர் எழுதி வரும் கடிதத்திற்கு பிரதமர் மோடி அலுவலகத்தில் இருந்து அக்னாலேஜ்மண்டு தருகின்றனர். தினமும் காலை 10 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து போனில் அழைத்து, அவரது மனு குறித்து விவாதிக்கின்றனர்.

என் கணவர் உள்பட குடும்பத்தார் அனைவரும் எனக்கு இதற்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர். அவர்களின் ஆதரவு காரணமாக நான் மக்கள் பிரச்சினைகளுக்காக பிரதமருக்கு கடிதங்களை எழுதி அனுப்பியுள்ளேன்.

அரசியல் கட்சிகள் தெரிவிக்கும் அதே கோரிக்கையை நான் தெரிவித்தாலும், அக்கோரிக்கையானது நிறைவேறும் போது, அதில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதாக நினைத்து மன நிறைவடைகிறேன்.

பெரியார், அம்பேத்கர், மார்கஸ் போன்ற தலைவர்களின் சித்தாந்தங்களை படித்து அறிந்து இருப்பதால், பொதுமக்களின் நலன் சார்ந்து நாள்தோறும் இந்த கடித போக்குவரத்து பணியை தொடர இருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பி வரும் கிருத்திகாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com