செயல்அலுவலர் புகார்- சிதம்பரம் தீட்சிதர்கள் 11 பேர் மீது வழக்குப்பதிவு

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 11 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இன்று இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா காட்சியுடன் ஆனி திருமஞ்சன விழா நிறைவுபெறுகிறது.
செயல்அலுவலர் புகார்- சிதம்பரம் தீட்சிதர்கள் 11 பேர் மீது வழக்குப்பதிவு
Published on

சிதம்பரம்:

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம், ஆருத்ரா தரிசனம் என ஆண்டுக்கு 2 முறை நடைபெறும் விழாக்களின் போது மூலவர் சபையிலிருந்து வெளியே வரும் நடைமுறையால் 4 நாட்களுக்கு கனக சபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவதில்லை.

இது தொன்றுதொட்டு நடைபெறும் வழக்கமாகும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் தற்போது ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி முதல் இன்று வரை கனக சபையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.

இது குறித்த புகாரின் பேரில் இந்து சமய அறநிலையத்துறையினர் கடந்த 24-ந்தேதி கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

அவர்கள் அறிவிப்பு பதாகையை அகற்றுமாறு தீட்சிதர்களிடம் கூறியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அறிவிப்பு பதாகையில் இருந்த வாசகங்களை அறநிலையத்துறையினர் அழித்தனர். ஆனால் அதன் பிறகு மற்றொரு அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன நிகழ்ச்சி நேற்று மதியம் நிறைவடைந்த பிறகு சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமான் சித் சபைக்குள் பிரவேசம் செய்தார்.

இதனை தொடர்ந்து நேற்று மாலை சிதம்பரம் உதவி கலெக்டர் (பொறுப்பு) பூமா, இந்து சமய அறநிலயத்துறை இணை ஆணயர் சந்திரன், தாசில்தார் செல்வக்குமார் ஆகியோர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசாருடன் கோவிலுக்கு சென்றனர். அவர்கள் அறிவிப்பு பதாகையை ஊழியர் மூலம் அகற்றி விட்டு சென்றனர்.

கனகசபையில் அறிவிப்பு பதாகை விவகாரம் தொடர்பாக சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் சிவராமதீட்சிதர் மற்றும் 10 பொதுதீட்சிதர்கள் மீது மகளிர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே இன்று இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா காட்சியுடன் ஆனி திருமஞ்சன விழா நிறைவுபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com