

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு அடுத்து வட மாநிலங்களுக்கு அதிக பயணிகள் பயணிக்கக்கூடிய ரெயில் நிலையமாக பெரம்பூர் ரெயில் நிலையம் மாறி வருகிறது. பெங்களூர், கோவை அசாம், எர்ணாகுளம் பாட்னா என பல்வேறு பகுதிகளில் இருந்தும் 10-க்கும் மேற்பட்ட விரைவு ரெயில்கள் இங்கு நின்று செல்கின்றன.
இதனால் வட மாநிலத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இரவு, பகல் பாராமல் சுமார் 10 மணி நேரம் ரெயில் நிலையத்தில் காத்திருந்து பயணிக்கிறார்கள். இவர்களுக்கு போதுமான கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி இல்லாததால் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இதனால் இரவு நேரத்தில் நடை மேடையிலே படுத்து தூங்குறார்கள். நடைமேடை ஓரமாக உள்ள தண்டவாளத்தை பலரும் கழிப்பறையாக உபயோகப்படுத்தி வருகிறார்கள். இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி, சுகாதாரம் சீர்கெட்டு வருகிறது. எனவே ரெயில்வே நிர்வாகம் விரைந்து செயல்பட்டு பயணிகளுக்கு கழிப்பறை வசதி, பயணிகள் தங்கும் அறை, மற்றும் உடமைகள் வைக்கும் அறை போன்ற வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.