விமான கட்டணத்தை தாண்டியது ஆம்னி பஸ் கட்டண உயர்வு

சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்த அறிவிப்பு தாமதம் ஆகிறது.ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணத்தை உயர்த்தி விட்டனர்.
விமான கட்டணத்தை தாண்டியது ஆம்னி பஸ் கட்டண உயர்வு
Published on

சென்னை:

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பஸ்கள் 11-ந் தேதி முதல் இயக்க திட்டமிடபட்டு இருந்தது. 12, 13, 14 ஆகிய நாட்களில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வோர் அதிகளவில் இருப்பதால் 3 நாட்களும் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். வழக்கமாக 8 ஆயிரத்தும் மேலான சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

சொந்த ஊர் செல்ல அரசு, ஆம்னி பஸ்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். பொங்கல் பயணத்திற்கு இன்னும் 4 நாட்களே இருக்கின்ற நிலையில் அரசு பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளனர்.

இதனால் சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்த அறிவிப்பு தாமதம் ஆகிறது. இதனால் ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணத்தை உயர்த்தி விட்டனர்.

சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ஏ.சி. படுக்கை வசதிக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் கேட்டதாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். மதுரை, திருநெல்வேலி மற்றும் தென் மாவட்ட பகுதிகளுக்கு வருகிற 12-ந்தேதி பயணம் செய்ய ரூ.4 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விமான கட்டணத்தை விட ஆம்னி பஸ் கட்டணம் அதிகமாக உள்ளதால் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

பொங்கல் பண்டிகைக் காலம் மற்றும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆம்னி பஸ்களில் இந்த ஆண்டு மிக கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் மன வேதனை அடைந்தனர்.

மேலும் அரசு விரைவு பஸ்கள் அனத்தும் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தற்போது இயக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்கள் மட்டும் செல்வதால் பெரும்பாலானவர்கள் கட்டணத்தை பொருட்படுத்தாமல் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக வடபழனி, அசோக்நகர், கிண்டி கத்திப்பாரா, பல்லாவரம், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து பயணம் செய்வோர் அரசு பஸ்களை விட தனியார் பேருந்துகளில் பயணம் செய்யவே விரும்புகின்றனர். அதேபோல் அவர்களுக்கு வசதியாக உள்ளது.

அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பிவிட்டன. வந்தே பாரத் ரெயிலிலும் இடங்கள் நிரம்பின. அரசு பஸ்கள் மட்டும் தான் ஒரே வழி. இந்த நிலையில் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்பு தாமதத்தால் மக்கள் ஆம்னி பஸ்களை நாடி செல்கின்றனர்.

இதனை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com