செம்பரம்பாக்கம் அருகே மற்றொரு பஸ் மோதியதில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது

சிறிது நேரத்தில் தீ மளமளவென ஆம்னி பஸ்முழுவதும் பற்றி எரிய தொடங்கியது.தீப்பற்றி எரிந்த ஆம்னி பஸ் முழுவதும் பேட்டரியால் இயங்கும் வகையில் இருந்தது.
செம்பரம்பாக்கம் அருகே மற்றொரு பஸ் மோதியதில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது
Published on

பூந்தமல்லி:

கோயம்பேட்டில் இருந்து பெங்களூர் நோக்கி இன்று காலை 6 மணியளவில் தனியார் பேட்டரி ஆம்னிபஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் 8 பயணிகள் பயணம் செய்தனர்.

செம்பரம்பாக்கம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு தனியார் ஆம்னிபஸ் கட்டுப்பாட்டை இழந்து எலெக்ட்ரிக் ஆம்னி பஸ்சின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.

இதில் எலெக்ட்ரிக் ஆம்னிபஸ்சின் பின் பகுதி நொறுங்கிய நிலையில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை கண்டதும் ஆம்னி பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்தபடி பஸ்சில் இருந்து வெளியே இறங்கினர். சிறிது நேரத்தில் தீ மளமளவென ஆம்னி பஸ்முழுவதும் பற்றி எரிய தொடங்கியது.

பஸ் டிரைவர் அம்ரிஷ் பீன்ஸ் மற்றும் அவ்வழியே சென்ற பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தீ பஸ் முழுவதும் கரும்புகையுடன் பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீரோடு ரசாயனம் கலந்த பவுடரை கலந்து பீய்ச்சி அடித்து தீணை அணைத்தனர்.

எனினும் ஆம்னி பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. பஸ் முழுவதும் தீயில் எரிந்து எலும்பு கூடானது. நசரத்பேட்டை போலீசார் மற்றும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து தீவிபத்தில் சிக்கிய ஆம்னிபஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விபத்து ஏற்படுத்திய மற்றொரு ஆம்னி பஸ்சின் முன்பகுதி மட்டும் சேதம் அடைந்தது. உடனடியாக அந்த பஸ் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதால் தீ விபத்தில் இருந்து அந்த பஸ் தப்பியது.

இந்த தீ விபத்தால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் ஒரே பக்கத்தில் எதிரெதிர் திசையில் வாகனங்கள் சென்றதால் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.

தீப்பற்றி எரிந்த ஆம்னி பஸ் முழுவதும் பேட்டரியால் இயங்கும் வகையில் இருந்தது. பின்னால் வந்த பஸ் மோதிய வேகத்தில் உடனடியாக ஆம்னி பஸ் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. கல்லூரி மாணவி ஒருவரின் சான்றிதழ்கள், விலை உயர்ந்த 3 செல்போன்கள், பயணிகள் கொண்டு வந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து போனது.

இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com