பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்- பொதுமக்கள் அறிவிப்பு

அரசு அதிகாரிகள் எங்களை தடுப்பதால் திருவிழா நடத்த முடியவில்லை.கோவில் வளாகத்தில் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதற்கட்டமாக அறிவித்து உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்- பொதுமக்கள் அறிவிப்பு
Published on

மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது நடுக்குப்பம் ஊராட்சி. இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த அனைத்து பொதுமக்கள் சார்பில் 10 நாள் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இக்கோவில் திருவிழாவை நடத்துவது சம்பந்தமாக அப்பகுதியை சேர்ந்த இரு தரப்பினருக்கு கடந்த 7 வருடங்களாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரசு அதிகாரிகள் இரு தரப்பினருக்கும் எவ்வித பிரச்சனையும் உண்டாகாமல் இருக்க கோவில் திருவிழாவை நடத்தாமல் நிறுத்தி விட்டனர். இதனால் கடந்த 7 ஆண்டு களாக திருவிழா நடைபெறவில்லை.

இந்நிலையில் நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் மக்கள் சார்பில் எங்கள் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடத்துவதை அரசு அதிகாரிகள் சட்டவிதிகளை பயன்படுத்தி தடுக்கின்றனர்.

அரசு அதிகாரிகள் எங்களை தடுப்பதால் திருவிழா நடத்த முடியவில்லை. எனவே இந்த ஆண்டு எங்கள் கோவிலுக்கு வழக்கம்போல் திருவிழா நடத்த அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு அதிகாரிகள் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்.

மேலும் அரசு சார்பில் எங்களுக்கு வழங்கிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் திரும்ப அரசிடமே ஒப்படைப்போம் என கோவில் வளாகத்தில் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதற்கட்டமாக அறிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com