

சென்னை:
தைப்பொங்கலையொட்டி சென்னையில் ‘நம்ம ஊர் திருவிழா’ என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இதற்கு முன்பு நடைபெற்றுள்ள ‘சங்கமம்’ நிகழ்ச்சிகளை போன்று நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை மட்டுமின்றி கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களிலும் தைப்பொங்கலையொட்டி 3 நாட்கள் கிராமிய கலை நிகழ்ச்சிகளை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் நடத்த தமிழக சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
இந்த விழாவை நடத்துவது தொடர்பாக சுற்றுலா துறையில் தனிக்குழு ஏற்படுத்தப்பட்டு என்னென்ன நிகழ்ச்சிகளை எங்கெங்கு நடத்தலாம் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் சென்னையில் பல இடங்களுக்கு நேரில் சென்று நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். இதற்காக அவர்களுக்கு பஸ் வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் 7 இடங்களில் இந்த நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து ஜனவரி 14-ந்தேதி பொங்கல் பண்டிகையன்று இந்த நிகழ்ச்சிகளை தொடங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் கலை நிகழ்ச்சிகள் களைகட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளின் போது கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.