செப்டம்பர் 30ம் தேதியுடன் மெகா தடுப்பூசி முகாம் நிறைவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வருகிற 30-ந்தேதி மட்டுமே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் தடுப்பூசிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நல மையங்களில் இலவசமாக செலுத்தப்படும்.தமிழகத்தில் இதுவரை 5.37 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30ம் தேதியுடன் மெகா தடுப்பூசி முகாம் நிறைவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்திக் இதுவரை 36 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் 37-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வருகிறது.

சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. இந்த சிறப்பு முகாம்களில் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணை செலுத்த உள்ளவர்களும், 2 தவணை முடிந்து முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பின்படி வருகிற 30-ந்தேதி மட்டுமே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் தடுப்பூசிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நல மையங்களில் இலவசமாக செலுத்தப்படும்.

அதன்படி தற்போது 12 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும், முகாமில் கலந்து கொண்டு பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.

தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை 5.37 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30-ம் தேதியுடன் மெகா தடுப்பூசி முகாம் நிறைவுப் பெறுகிறது. அக்டோபர் மாதம் முதல் தடுப்பூசி செலுத்துவதில் சிறிய மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, அக்டோர் முதல் தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com