ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்வையிட வரும் வெளி மாநில மேயர்கள்

உள்ளூர்க்காரர்களை மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து வருபவர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.தேசிய அளவில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்வையிட வரும் வெளி மாநில மேயர்கள்
Published on

கோவை:

கோவை நகரில் ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம், முத்தணன் குளம், உக்கடம் பெரிய குளம் மற்றும் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகின்றன.

செயற்கை நீரூற்றுகள், பிரமாண்ட டவர்கள், பொம்மை சிற்பங்கள், குளத்துக்குள் நடைபாதை, படகு சவாரி என பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இது உள்ளூர்க்காரர்களை மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து வருபவர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

சமீபத்தில் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய நகரங்களை தேர்வு செய்து விருது வழங்கியது. அதில் பில்ட் என் விரான்மென்ட் என்ற தலைப்பில் கோவைக்கு முதல் பரிசு கிடைத்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவித்தார்.

இதைத்தொடர்ந்து மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கோவையில் வருகிற 16-ந் தேதி தேசிய அளவில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

அதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து 150 நகரைச் சேர்ந்த மேயர்கள் மற்றும் மாநகராட்சி கமிஷனர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த மற்ற மாநகராட்சிகளின் மேயர்கள் மற்றும் கமிஷனர்களுக்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

அன்றைய தினம் கருத்தரங்கு முடிந்ததும் உக்கடம் பெரியகுளத்தில் அமைந்துள்ள அனுபவ மையம் மற்றும் ஐ லவ் கோவை செல்பி பாயிண்ட், வாலாங்குளத்தில் மேம்பாலத்துக்கு கீழ் அமைந்துள்ள கட்டமைப்பு மற்றும் ரேஸ்கோர்ஸ் மாதிரி சாலையை அக்குழுவினர் சுற்றி பார்க்கிறார்கள்.

இதையொட்டி ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்வதற்கு உதவி நிர்வாக பொறியாளர், உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர் கொண்ட குழு நியமித்து மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com