

ராமநாதபுரம்:
தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது ஆண்டு நினைவு நாளையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு இமானுவேல் சேகரனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர் தியாகி இமானுவேல் சேகரனார். பட்டியல் இனத்தில் இருந்து வெளியேறுவது குறித்து தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் உறுதியான கொள்கை முடிவு எடுக்கும்.
இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று மாற்றுவதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டியதில்லை. இந்தியா, பாரத் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. சனாதனம் தொடர்பான பிரச்சினையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை வைத்தவர் போலி சாமியார். அவரை வன்மையாக கண்டிக்கிறேன்.
உதயநிதி வந்தபிறகு பா.ஜ.க.வுக்கு அதிக இளைஞர்கள் வருகை தருகிறார்கள். பா.ஜ.க.வின் வளர்ச்சியும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.