

ராயபுரம்:
சென்னை கடல்பகுதியில் மயிலாடுதுறையை சேர்ந்த 14 மீனவர்கள் ஒரு விசைப் படகில் இன்று அதிகாலை வந்தனர். இதனை கண்ட காசிமேடு மீனவர்கள் மற்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சென்னை, செங்கை சிங்கார வேலர் விசைப்படகு உரிமையாளர் மற்றும் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தலைவர் விஜேஷ் மற்றும் மீனவர்கள் மற்றொரு படகில் சென்று சென்னை கடல்பகுதியில் இருந்த மயிலாடுதுறை மீனவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். சென்னை கடல் பகுதியில் மீன்பிடித்ததாக அவர்கள் அனைவரையும் சிறை பிடித்தனர். பின்னர் அவர்களது விசைப்படகை காசிமேடு மீன்பிடி துறைமுகம் புதிய வார்ப்பில் நிறுத்திவைத்தனர். இதனால் காசிமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இருதரப்பு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விசைப்படகில் கியர் பாக்ஸ் பழுதானதால் அதனை சரிசெய்ய சென்னை கடற்கரைக்கு வந்ததாக மயிலாடுதுறை மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இதுதொடர்பாக மீன்வளத்துறை உதவி இயக்குனர் மூலமாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.