காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மாமரம் காய்க்க தொடங்கியது

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள 4 வகையான சுவையுடன் கூடிய 3,500 ஆண்டுகள் பழமையான மாமரம் காய்க்க தொடங்கியுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்
Published on

காஞ்சிபுரம்:

உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கருவறையில் உள்ள சாமி மணல் லிங்கமாக காட்சி அளிக்கிறார். இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இப்படி புகழ்பெற்ற இந்த கோவில் கருவறைக்கு பின்புற பிரகாரத்தில் மாமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார்.

அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இந்த மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தார் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. மேலும் இந்த மாமரம் 3,500 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாகும்.

இந்த மரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகை சுவைகளை கொண்ட பழங்களை தருகிறது. மக்கள்பேறு இல்லாதவர்கள் இந்த மாமரத்தின் பழத்தை சாப்பிட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தற்போது இந்த மாமரத்தில் 4 சுவையுடன் மாங்காய்கள் காய்க்க தொடங்கி உள்ளது. இந்த மாமரத்தை பக்தர்கள் பார்த்து வியந்து செல்கின்றனர்

X

Maalai Malar
www.maalaimalar.com