வதந்தியை நம்ப வேண்டாம்- சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் கோரிக்கை விடுத்த கலெக்டர்

மாயமானதாக கூறப்பட்ட பெண்ணுக்கு எதுவும் ஆகவில்லை, நன்றாக இருக்கிறார் என்பதை சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் கலெக்டர் தெளிவுப்படுத்தினார்.
காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி
காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி
Published on

ஸ்ரீபெரும்புதூரில் சுமார் 20 ஆயிரம் பேர் சாலை மறியல் செய்கிறார்கள் என்ற தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி சம்பவ இடத்துக்கு விரைந்தார். அங்கு சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது 8 பேர் மாயமாகிவிட்டதாக சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தவர்கள் கூறினார்கள். இதையடுத்து அவர்களுக்கு கலெக்டர் ஆர்த்தி விளக்கம் அளித்தார்.

ஆனால் சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தவர்கள் கலெக்டர் ஆர்த்தி கூறியதை முதலில் நம்ப மறுத்தனர். இதைத்தொடர்ந்து மாயமானதாக கூறப்பட்ட ஒரு பெண்ணிடம் வீடியோ காலில் கலெக்டர் ஆர்த்தி தொடர்பு கொண்டார். அவரிடம் நலம் விசாரித்தார்.

மாயமானதாக கூறப்பட்ட பெண்ணுக்கு எதுவும் ஆகவில்லை. நன்றாக இருக்கிறார் என்பதை சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் கலெக்டர் ஆர்த்தி தெளிவுப்படுத்தினார். வீடியோ காலில் பேசிய காட்சிகளையும் காண்பித்து விளக்கம் அளித்தார்.

பின்னர் அவர் அங்கிருந்தவர்கள் மத்தியில் பேசியதாவது:-

உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 4 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். எனவே தொழிலாளிகள் மாயமாகி விட்டதாக சொல்வதை யாரும் நம்ப வேண்டாம்.

விடுதி காப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் நிறுவன விடுதிகளில் தங்கி இருப்பவர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறதா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

எனவே போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள்.

இவ்வாறு கலெக்டர் ஆர்த்தி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் சமரசமாகி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com