நெல்லையில் மல்லிகை பூ கிலோ ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனை

வடகிழக்கு பருவமழை காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்படுகிறது.பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டாலும் பொதுமக்கள் பெருமளவில் அதனை வாங்கி சென்றனர்.
நெல்லையில் மல்லிகை பூ கிலோ ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனை
Published on

நெல்லை:

சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்கள், கோவில் திருவிழா காலங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும்.

தற்போது கார்த்திகை மாதத்தில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் மார்கழியில் சுப நிகழ்ச்சிகள் பெரும்பாலும் நடத்த மாட்டார்கள். எனவே அடுத்ததாக தை மாதம் பிறந்த பின்னரே சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்நிலையில் கார்த்திகை மாதத்தின் கடைசி முகூர்த்த நாளான நாளை (வியாழக்கிழமை) ஏராளமான திருமணங்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி பூக்களின் தேவை அதிகரித்து உள்ளது.

இதற்கிடையே வடகிழக்கு பருவமழை காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதனால் நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

மல்லிகை பூ நேற்று ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில், இன்று மேலும் ரூ. 1,000 உயர்ந்து கிலோ ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையானது. இதேபோல் பிச்சிப்பூ கிலோ ரூ.700-க்கும், ரோஜா பூ ரூ.100 முதல் 150 வரையும், கேந்தி பூ ரூ.50-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும் விற்கப்பட்டது.

பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டாலும் பொதுமக்கள் பெருமளவில் அதனை வாங்கி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com