தாமதமாகவில்லை.. காத்திருந்து தடை நீங்கியதும் விசாரித்துள்ளேன்- ஆறுமுகசாமி பேட்டி

என் ஆணையத்திற்கு மட்டும் அதிக பணம் செலவிடப்பட்டதாக சொல்கிறார்கள். அறிக்கை ஆங்கிலத்தில் 500 பக்கங்களையும், தமிழில் 608 பக்கங்களையும் கொண்டுள்ளது.
தாமதமாகவில்லை.. காத்திருந்து தடை நீங்கியதும் விசாரித்துள்ளேன்- ஆறுமுகசாமி பேட்டி
Published on

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆணையம் விசாரணையை தொடர வேண்டும் என்று கூறிய முதல்- அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சேருவதற்கு முன்பு இருந்த உடல் நிலை மற்றும் மருத்துவமனையில் சேர்ந்த பிறகு அவரது நிலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. மொத்தம் 154 சாட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு சம்மன் அனுப்ப முதல் ஒரு மாதம் தேவைப்பட்டது. அதன் பிறகு விசாரணையை தொடங்கினேன். ஒரு வருடத்திற்குள் 149 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி உள்ளேன்.

இந்த வாதத்தை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தபோது ஆறுமுகசாமி ஆணையம் ஒரு நீதிமன்றம் போலவே செயல்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

நீதிமன்றத்தை பொறுத்தவரை வருடத்தில் 200 நாட்கள் வேலை நாட்களாகும். நான் 150 நாட்கள் வேலை பார்த்து ஒவ்வொரு சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையை அதிக பக்கங்களுடன் தயாரித்து உள்ளேன். சிலர் தடை வாங்கினார்கள். அது அவர்களின் உரிமை. எனவே காத்திருந்து தடை நீங்கியதும் விசாரித்து உள்ளேன்.

இந்த அறிக்கை ஆங்கிலத்தில் 500 பக்கங்களையும், தமிழில் 608 பக்கங்களையும் கொண்டுள்ளது. இந்த அறிக்கையை வெளியிடுவது பற்றி அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராக சசிகலாவுக்கு சம்மன் கொடுத்தோம். அவர் விளக்கம் அளிக்க வாய்ப்பையும் கொடுத்தோம். ஆனால் அவர் வரவில்லை என்பதால் எழுதி கொடுத்தார். அதன் பிறகு ஒருவரை கட்டாயப்படுத்துவது சரியாக இருக்காது. அந்த உரிமையை சோதித்து பார்க்க விரும்பவில்லை. சசிகலா விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் அவரிடம் எழுத்து பூர்வமாக விளக்கம் பெறப்பட்டது. சசிகலா தரப்பில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் இருந்து ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததில் எந்தவித சந்தேகமும் கிடையாது. இதனால் அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் விசாரணை நடத்தவில்லை.

என்னால் முடிந்த வரை விசாரணை நடத்தி அதை அறிக்கையில் தெரிவித்து இருக்கிறேன். விசாரணை நடத்துவதில் தாமதம் எதுவும் செய்யவில்லை.

என் ஆணையத்திற்கு மட்டும் அதிக பணம் செலவிடப்பட்டதாக சொல்கிறார்கள். இதற்கு முன்பு எத்தனையோ விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. அப்போது எல்லாம் இதுபற்றி எதுவும் சொல்லவில்லையே. ஏன்?

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com