முக கவசம் அணிந்து பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள்

வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.சிறப்பு தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முக கவசம் அணிந்து பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள்
Published on

திண்டுக்கல்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் வைரஸ் காய்ச்சல், மெட்ராஸ் ஐ மற்றும் மழைக்கால நோய்கள் வேகமாக பரவி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

சீனாவில் பரவும் வைரஸ் ஹெச் 9 என் 1 இன்ப்ளூயன்ஸா, தமிழகத்தில் பரவி வரும் வைரஸ் தன்மையுடன் ஒத்துபோவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் தெரிவித்துள்ளார். இவை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், உடல் சோர்வு ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிகிச்சைக்கு வரும் நிமோனியா பாதிப்பு சார்ந்த நோயாளிகளின் விபரங்களை ஒருங்கிணைந்த நோய்த்தொற்று கண்காணிப்பு தளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பொது இடங்களில் நிலவேம்பு கசாயம், ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குழந்தைகளுக்கு அதிகளவு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் முக கவசம் அணிந்து பள்ளிக்கு வருமாறு ஒரு சில தனியார் பள்ளிகள் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்று முதல் மீண்டும் முக கவசம் அணிந்து பள்ளிக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். இந்த நடைமுறை தனியார் பள்ளிகளில் மட்டுமே பின்பற்றப்படுகிறது. எனவே இதனை அரசு பள்ளிகளிலும் நடைமுறைபடுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com