

தூத்துக்குடியைச் சேர்ந்த நாசரேத் துரை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டம் கந்தசாமிபுரம் கிராமத்தில் நாலாயிர முடியார்குளம் மற்றும் நத்தகுளம் ஆகிய நீர்நிலைகள் அமைந்து உள்ளன. இந்த நீர்நிலை படுகைகளில் இருந்து மணல் அள்ளப்பட்டு கடத்தி வருகின்றனர். இதனால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. விவசாயத்துக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.
இது தொடர்பாக மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களிடம் கேள்வி எழுப்பினால் மிரட்டி வருகின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தோம்.
இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கந்தசாமிபுரம் கிராமத்தில் நத்தகுளம் மற்றும் நாலாயிர முடியார் குளத்தில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறதா? என மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.