திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதையடுத்து திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளத்தில் உற்சாக குளியலிடும் சுற்றுலா பயணிகள்.
திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளத்தில் உற்சாக குளியலிடும் சுற்றுலா பயணிகள்.
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். நேற்றிரவும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பெருஞ்சாணி அணை பகுதியில் 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

புத்தன் அணை, சுருளோடு, பாலமோர் பகுதிகளிலும் மழை பெய்தது. சுருளோட்டில் அதிகபட்சமாக 45.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதையடுத்து திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் இரண்டு நாட்களாக மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிய இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் திற்பரப்பு அருவி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.03 அடியாக உள்ளது. அணைக்கு 398 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையிலிருந்து 386 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு 296 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 25.92 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 17.80 அடியாகவும், சிற்றார்-1 அணை நீர்மட்டம் 12.40 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 12.49 அடியாகவும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com