வானூர் அருகே தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் சாலை மறியல்

நடுக்குப்பம் மீனவகிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக கடல் அரிப்பு காரணமாக அங்குள்ள வீடுகள் இடிந்தன. அதோடு படகு நிறுத்த இடம் இல்லை என அந்த பகுதி மீனவர்கள் ஆதங்கப்பட்டனர்.
சாலை மறியல் செய்த மீனவர்களை படத்தில் காணலாம்.
சாலை மறியல் செய்த மீனவர்களை படத்தில் காணலாம்.
Published on

வானூர்:

விழுப்புரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் சின்னமுதலியார்சாவடி, பொம்மையார்பாளையம், பிள்ளைச்சாவடி, நடுக்குப்பம் உள்ளிட்ட 19 மீனவ கிராமங்கள் உள்ளன.

இவற்றில் நடுக்குப்பம் மீனவகிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக கடல் அரிப்பு காரணமாக அங்குள்ள வீடுகள் இடிந்தன. அதோடு படகு நிறுத்த இடம் இல்லை என அந்த பகுதி மீனவர்கள் ஆதங்கப்பட்டனர். எனவே இந்த பகுதியில் தூண்டில் வளைவு அமைக்ககோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இன்று காலை நடுக்குப்பம் மீனவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். அவர்கள் புதுவைகிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோட்டக்குப்பம் ரவுண்டானா பகுதியில் மறியல் செய்தனர். இந்த வழியாகத்தான் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் செல்கின்றன.

பிரதான சாலை என்பதால் இந்த இடத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். மறியல் செய்த மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது மீனவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்காவிட்டால் ரேசன் கார்டு, ஆதார்கார்டு ஆகியவற்றை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைப்போம் என்று ஆவேசமடைந்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com