ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெடிவிபத்தில் 5 பேர் பலி- பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெடிவிபத்தில் 5 பேர் பலியான சம்பவத்தில் தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலையின் உரிமையாளரான வழிவிடுமுருகனை போலீசார் இன்று கைது செய்தனர்.
கைது
கைது
Published on

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா புதுப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் வழிவிடுமுருகன். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே களத்தூர் நாகலாபுரத்தில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார்.

அவரது ஆலையில் 500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் அவரது பட்டாசு ஆலையில் கடந்த 1-ந்தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. ரசாயன மருந்து கலந்தபோது ஏற்பட்ட உராய்வால் வெடிவிபத்து நடந்தது.

இதில் அந்த ஆலையில் இருந்த 7 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. புத்தாண்டு தினம் என்பதால் 15 பேர் மட்டுமே பணியில் இருந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த வெடிவிபத்தில் குமார், பெரியசாமி, வீரகுமார் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் முருகேசன் என்பவர் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே இறந்தார். காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மற்றொருவரும் இறந்தார்.

இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இதையடுத்து அந்த பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த வெடிவிபத்து குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பட்டாசு ஆலையின் உரிமையாளரான வழிவிடுமுருகன் மீது வெடிபொருட்களை அஜாக்ரதையாக கையாளுதல், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுதல், இறப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவாக இருந்த அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும் அவர் சிக்கவில்லை. இந்நிலையில் வழிவிடுமுருகனை போலீசார் இன்று கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com