காலை உணவு திட்டத்திற்கு தாமதமாக வரும் குழந்தைகளுக்கு உணவு தர மறுத்த ஊழியர்- அதிகாரிகள் விசாரணை

குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கவே அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். அங்கன்வாடி பணியாளரிடம் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது.
காலை உணவு திட்டத்திற்கு தாமதமாக வரும் குழந்தைகளுக்கு உணவு தர மறுத்த ஊழியர்- அதிகாரிகள் விசாரணை
Published on

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை யூனியனுக்கு உட்பட்ட அய்யலூர் அருகே உள்ள களர்பட்டி 7-வது வார்டு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் சுமார் 70 மாணவ-மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் காலை உணவு திட்டத்திற்கு மாணவிகளை காலை 8 மணிக்கு வரச் சொல்வதாகவும், தாமதமாக வரும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க மறுப்பதாகவும் புகார்கள் வந்தது. இதுகுறித்து குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கவே அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இங்கு காலை உணவு திட்டத்தின் கீழ் அமைப்பாளராக பணியாற்றி வரும் அம்பிகா என்பவர் பள்ளிக்கு வரும் குழந்தைகளிடம் தண்ணீர் குடத்தில் எடுத்து வரச்சொல்வதாகவும், தாமதமாக வந்தால் உணவு கிடையாது என்றும் கூறியதாக குழந்தைகள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாகவே இப்பிரச்சினை அடுத்தடுத்து எழுந்த நிலையில் இது குறித்து அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்த முடிவு செய்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் தலைமையில் வடமதுரை ஊட்டச்சத்து அங்கன்வாடி மேலாளர்கள், திண்டுக்கல் மண்டல துணைத் திட்ட தாசில்தார் ஆகியோர் நேரடியாக பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அங்கன்வாடி பணியாளரிடம் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது. தாமதமாக வந்தாலும் உணவு வழங்க வேண்டும் என்று எச்சரித்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com