தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாளையுடன் முடிவடைகிறது

தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாளையுடன் முடிவடைகிறது
Published on

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 18-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவித்தது. அதன்படி பிப்ரவரி மாதம் 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியான அன்று மாலை முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சோதனையிட்டு வந்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிக அளவில் ஜவுளி சார்ந்த தொழில்கள் நடைபெற்று வந்தன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக ஜவுளி சந்தை மந்த நிலையில் நடைபெற்று வந்தது. இதேப்போல் கருங்கல்பாளையம் மாட்டு சந்தை வியாபாரமும் பாதிப்பு ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 54 நாட்களாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவடைந்தது. தொடர்ந்து இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாளையுடன் (சனிக்கிழமை) நிறைவுபெறுகிறது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com