2 மாத குழந்தையின் தொண்டையில் இருந்த டியூப்பை அகற்றாமல் விட்ட டாக்டர்கள்... அஜாக்கிரதையால் உயிருக்கு ஆபத்து

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது அடிக்கடி வாந்தியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது. தற்போது பச்சிளம் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மிகவும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறது.
2 மாத குழந்தையின் தொண்டையில் இருந்த டியூப்பை அகற்றாமல் விட்ட டாக்டர்கள்... அஜாக்கிரதையால் உயிருக்கு ஆபத்து
Published on

மதுரை:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் லோகநாதன்-மீனாட்சி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 8 வயது ஆகிறது.

இந்தநிலையில் மீனாட்சி இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்தார். பிரசவத்திற்கு முன்பாக பல்வேறு கட்டங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கூறப்பட்டது. அந்த குழந்தையை வரவேற்கும் விதமாக மருந்து, மாத்திரைகள் உட்கொண்டு உடலை மீனாட்சி முறையாக பராமரித்து வந்தார்.

பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த நவம்பர் மாதம் 14-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தையின் எடை 1 கிலோ 900 கிராம் மட்டுமே இருந்தது. சராசரி எடையை விட குறைவாக இருந்ததால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் மற்றும் சர்க்கரை அளவு குறைபாடும் இருந்தது.

இதையடுத்து அந்த குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் இன்குபேட்டரில் வைத்து டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். அங்குள்ள சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை பிரிவில் 21 நாள் பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சொந்த ஊரான முதுகுளத்தூருக்கு சென்றனர்.

அங்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது அடிக்கடி வாந்தியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது. வாந்தி எடுக்கும் போது வாயில் இருந்து குழாய் போன்ற அமைப்பில் காற்றுடன் தண்ணீர் வெளியேறுவதுபோல் முட்டை முட்டையாக வந்ததை பார்த்து பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அழுது கொண்டே வலியால் துடித்ததால் உடனடியாக குழந்தையை பரமக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது ஸ்கேன் எடுத்து பார்த்ததில் குழந்தையின் வயிற்றில் டியூப் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 21 நாட்கள் இன்குபேட்டரில் வைத்திருந்த குழந்தைக்கு தொண்டைக்குள் டியூப்பை விட்டு சிகிச்சை அளித்த போது அந்த டியூப்பை அகற்றாமல் அஜாக்கிரதையால் மறந்து குழந்தையை பெற்றோரிடம் திருப்பி கொடுத்துள்ளனர். அதனை அகற்ற அங்கு போதிய மருத்துவ வசதி இல்லாததால் மீண்டும் குழந்தையை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.

இதனால் தற்போது பச்சிளம் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மிகவும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறது. டாக்டர்களின் அலட்சியம் மற்றும் அஜாக்கிரதையால் குழந்தை உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் உள்ளது. அங்கு சிறப்பு டாக்டர்கள் குழுவினர் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து பரிசோதனை மற்றும் டியூப்பை அகற்றுவதற்கான சிகிச்சையை தொடங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com