அண்ணாமலையின் தி.மு.க. பைல் பெயில் ஆகும்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.பிரதமர் மோடி வெளிநாடுகளில் உல்லாசப் பயணம் சென்று தலைவர்களை கட்டிப்பிடித்து உற்சாகமாக இருக்கிறார்.
அண்ணாமலையின் தி.மு.க. பைல் பெயில் ஆகும்-  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
Published on

சென்னை:

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் நினைவுநாளையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்திற்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ., தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

காங்கிரஸ் பேரியக்கம் மக்களோடு இணைந்த இயக்கம். மக்களுக்காக தொண்டாற்றும் இயக்கம். தற்போது நாட்டில் நடைபெறும் ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமர் மோடி வெளிநாடுகளில் உல்லாசப் பயணம் சென்று தலைவர்களை கட்டிப்பிடித்து உற்சாகமாக இருக்கிறார். கலவரம் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் மோடிக்கு அதுபற்றிய நினைவு வந்திருக்கிறது.

வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மோடியை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். 350 இடங்கள் கிடைக்கும் என்று மார் தட்டுகிறார்கள். 150 இடங்கள் கூட அவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை. மோடி மீதும் இடி திரும்பும் நாட்களும் வரும்.

இந்திய கூட்டணியில் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால் என்று பிரபலமான கட்சிகளும், தலைவர்களும் கைகோர்த்து இருக்கிறார்கள். ஆனால், மோடியின் அணியில் தலைவரும் அவரே, தொண்டரும் அவரே என்ற நிலையில் உள்ள ஒரு கட்சி இருக்கிறது. த.மா.கா. தான் அந்த கட்சி. ஜி.கே. வாசனுக்கு அவரது குடும்பத்தினரே ஓட்டு போட மாட்டார்கள். மனசாட்சி இருந்தால் அவர் கூட அந்த கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்.

பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை நடை பயணம் போவதாக சொல்கிறார்கள். நடைபயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல்காந்தி ஆகிவிட முடியாது. ராகுல்காந்தி கால்நடையாய் சென்று நாடு முழுவதும் மக்களை சந்தித்தார். ஆனால், அண்ணாமலை கார் பயணம் செல்ல உள்ளாராம். அந்த பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

தமிழகத்தில் என்றுமே பாரதிய ஜனதாவுக்கு இடமில்லை. தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அண்ணாமலை குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அவர் கூறும் எந்த குற்றச்சாட்டையும் கோர்ட்டில் நிரூபிக்க முடியாது. அண்ணாமலை வெளியிடும் தி.மு.க. பைல்கள் எல்லாமே பெயில் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கோபண்ணா, பொன். கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஏ. வாசு, ரங்கபாஷ்யம், பால முருகன், சுமதி அன்பரசு, வழக்கறிஞர் சுதா, அகரம் கோபி, புத்தன் சந்திரசேகரன் குறிஞ்சி பாலாஜி சிவராஜ சேகரன்ஏழுமலை, சூளை ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com