தருமபுரியில் கடன் தொல்லையால் கணவன்-மனைவி தூக்குபோட்டு தற்கொலை

வேதமூர்த்தி, அவரது மனைவி சூர்யாவும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரியில் கடன் தொல்லையால் கணவன்-மனைவி தூக்குபோட்டு தற்கொலை
Published on

தருமபுரி:

தருமபுரி அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன். இவரது மகன் வேதமூர்த்தி (வயது38). இவர் ஒரு பிரபல உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வேதமூர்த்தி அவரது உறவினர் பெண்ணான சூர்யா (24) என்பவரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமுருகன் வீட்டின் அருகே தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் வேதமூர்த்தி தனக்கு தெரிந்தவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். ஆனால், அவருக்கு போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்தாமல் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் வேதமூர்த்தியிடன் கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளதாக தெரிய வந்தது.

இதுகுறித்து வேதமூர்த்தி தனது தந்தை திருமுருகனிடம் தெரிவித்தபோது, தன்னிடம் உள்ள நிலத்தை விற்று கடனை அடைக்கலாம் என்று கூறி சமாதானம் பேசியுள்ளார்.

இருந்த போதிலும் மனவேதனையில் இருந்த வேதமூர்த்தி, தனது வீட்டில் நேற்று இரவு தூங்க சென்றார்.

இந்த நிலையில் இன்று காலை நீண்டநேரமாகியும் வேதமூர்த்தியும், அவரது மனைவி சூர்யாவும் வீட்டில் இருந்து வெளியே வராமல் கதவு மூடியபடி இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வேதமூர்த்தியின் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் வெளியே வராததால், உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வேதமூர்த்தியும், அவரது மனைவி சூர்யாவும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

இதனை கண்ட உறவினர்கள் அதிச்சியடை ந்தனர். அப்போது அவர்கள் இருவரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால், வேதமூர்த்தி வீட்டின் முன்பு பொது மக்கள் திரண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வேதமூர்த்தி, சூர்யா ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் தொல்லையால் கணவன்-மனைவி இருவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com