

ராணிப்பேட்டை நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை மாநில திடக்கழிவு மேலாண்மைக்குழு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாய கண்காணிப்புக்குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது:-
ராணிப்பேட்டை புதிய மாவட்டம் என்றாலும், நகராட்சி வளாகத்துக்குள்ளேயே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தியுள்ளது சிறப்பு ஆகும்.
இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் பயன் என்னவென்றால் மொத்தமாக கொண்டு வரப்படும் குப்பைகளில் 60 சதவீதம் மக்கும் குப்பைகளாகவும், 40 சதவீதம் மக்காத குப்பைகளாக இருக்கும்.
சென்னையைப் பொருத்தவரை 23 சதவீதத்துக்கு மேல் இந்நடைமுறை வரவில்லை. இது தொடர்பாக கடந்த 10 நாள்களுக்கு முன்பு முதல்வரை நேரில் சந்தித்து அறிக்கையை தந்துள்ளேன்.
அப்போது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனில் சென்னை மற்றும் கோவை நகரங்கள் பிரச்சனைக்குள்ளாகும் எனவும் தெரிவித்துள்ளேன்.
ராணிப்பேட்டை நகராட்சியில் 95 சதவீதம் குப்பைகள் தரம் பிரித்து அளிக்கப்படுவது சிறப்பு வாய்ந்தது. அதை அப்படியே பராமரிக்க வேண்டும் என்றால் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
உலக வெப்பமயமாதலில் உலக அளவில் திடக்கழிவுகள் 16 சதவீதம் பங்களிப்பு உள்ளதால், 1.5 சதவீதம் கடல் வெப்பம், 2 சதவீதமாக உயர்ந்தால் பாதி சென்னை கடலில் மூழ்கும்.
கொல்கத்தா நகரம் முழுவதும் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. வீடுகளிலேயே 100 சதவீதம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என சட்டம் உள்ளது. அதை நகராட்சி, மாநகராட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தார்.
இதையும் படியுங்கள்...சென்னையில் நாளை இரவு 12 மணிக்கு பிறகு பொதுமக்கள் வெளியில் நடமாட தடை