என்.எல்.சி. 1-வது சுரங்கத்தை ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை

என்.எல்.சி. 1-வது சுரங்கத்தை ஜீவா தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக நெய்வேலியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
என்.எல்.சி. 1-வது சுரங்கத்தை ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை
Published on

நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 17 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இவர்களில் 5 ஆயிரம் பேர் நிரந்தர தொழிலாளர்கள். 12 ஆயிரம் பேர் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள். என்.எல்.சி. நீரோட்டத்துக்காக வீடு, நிலம் வழங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாக பல ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர்.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை என்.எல்.சி. தலைவர் வீட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் சேகர் அறிவித்து இருந்தார். ஆனால், போலீசார் இந்த பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை. அதனை தொடர்ந்து என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த சென்னை ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றினர்.

அதன்படி நெய்வேலி பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா திடலுக்கு போராட்ட இடத்தை மாற்றினர். இன்று 10-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒப்பந்த தொழிலாளர்கள் என்.எல்.சி. 1-வது சுரங்கம் வாசல் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாலை 5.30 மணிக்கு 1-வது சுரங்கத்தின் வாசல் வழியாக வேலைக்கு சென்ற நிரந்தர தொழிலாளர்களை தங்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கைகூப்பி வணங்கி ஆதரவு திரட்டினர்.

நாளை (சனிக்கிழமை) 2-வது சுரங்க வாசல் முன்பு போராட்டம் நடைபெறுகிறது. ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக நெய்வேலியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com