

தென்தாமரைகுளம்:
நாகர்கோவில் அருகே பறக்கை புல்லுவிளையைச் சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 45).
இவர், கன்னியாகுமரி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி ஒருவருக்கு செல்போனில் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக தெரிகிறது. இதுகுறித்து மாணவி தனது சகோதரரிடம் தெரிவித்தார்.
அவர், கல்லூரிக்கு சென்று பேராசிரியரிடம் இதுகுறித்து கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவி கல்லூரி நிர்வாகத்திடமும் போலீசிடமும் புகார் செய்தார். சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்காததால் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாணவிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேராசிரியர் வாசுதேவன் மீது தென்தாமரைகுளம் போலீசார் பெண்மைக்கு களங்கம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். கல்லூரியும் காலவரையின்றி மூடப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டனர். பேராசிரியர் வாசுதேவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததையடுத்து அவரை சஸ்பெண்டு செய்துள்ளனர்.