பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்திய 487 செவிலியர்கள் மீது வழக்கு

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான செவிலியர்கள் மாலையில் விடு விக்கப்பட்டனர். இது தொடர்பாக 487 செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்திய 487 செவிலியர்கள் மீது வழக்கு
Published on

சென்னை:

மருத்துவ தேர்வு வாரிய தேர்வு மூலமாக பணியில் சேர்ந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை நுழைவு பாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் திடீர் மறியலிலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளை போலீசார் கைது செய்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் உள்பட பெண் போலீசார் காயம் அடைந்தனர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான நர்சுகள் மாலையில் விடு விக்கப்பட்டனர். இது தொடர்பாக 487 நர்சுகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக கூடுதல், அரசு அதிகாரிகளின் உத்தரவை மீறுதல் ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் சங்க நிர்வாகிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். சங்க மாநில பொதுச்செயலாளர் அம்பேத்கர் கணபதி, தலைவர் ராதாமணி, நிர்வாகிகள் இளங்கோ உள்ளிட்டவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கையை ஏற்று முதல்கட்டமாக ஒரு வருடத்தில் 5000 நர்சுகள் பணி நிரந்தரம் செய்வதாகவும், கொரோனா ஊக்கத்தொகை, ஊதிய முரண்பாடு கிடைக்காதவர்களுக்கு வழங்கவும் உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றதாக நிர்வாகிகள் அறிவித்தனர். நேற்று இரவு அனைவரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

சென்னையில் 3 ஆயிரம் நர்சுகள் ஒரேநாளில் குவிந்த நிலையில் ஒவ்வொருவரும் பஸ், ரெயில்களில் புறப்பட்டு சென்றனர். பெரும்பாலானவர்கள் இன்று பணியில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com