தடையை மீறி நடந்த எருதாட்டத்தில் காளைகள் முட்டி 10 பேர் காயம்

ஓமலூர் அருகே தடையை மீறி நடந்த எருதாட்டத்தில் காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.
படுகாயம்
படுகாயம்
Published on

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் பொங்கல் பண்டிகை முடிந்ததும் எருதாட்டம் நடத்தப்படும். தற்போது, கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் அதிகமாக கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அதனால், கிராமங்களில் எருதாட்டம் நடத்த அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். இந்த நிலையில், ஓமலூர் அருகேயுள்ள ரெட்டிபட்டி கிராமத்தில் தடையை மீறி எருதாட்டம் நடத்த இளைஞர்கள் பலரும் ஏற்பாடுகள் செய்திருந்தனர். அதனால், கிராமத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கிராமத்தின் நுழைவாயிலில் வெளியூர் ஆட்கள் நுழையாதபடி தடைகளை ஏற்படுத்தி, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், திடீரென கோவில் வளாகத்தில் இளைஞர்கள் சிலர் காளைகளை ஓடவிட்டனர். அதனால், கிராம மக்களும், பக்கத்து கிராமங்களை சேர்ந்த மக்களும் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.

அங்கிருந்த வீடுகள், பள்ளிகள் ஆகியவற்றின் மீது ஏறியும், மரங்களில் ஏறியும் இளைஞர் வேடிக்கை பார்க்க குவிந்திருந்தனர். தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட காளைகளை கொண்டு கோவில் வளாகத்தில் எருதாட்டத்தை இளைஞர்கள் நடத்தினர். ஒவ்வொரு காளையையும் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வடக்கயிறை கழுத்தில் கட்டி இழுத்துவந்து கோவிலை சுற்றி ஓடவிட்டனர்.

அப்போது மக்கள் கூட்டத்தை பார்த்த எருதுகள், துள்ளி குதித்து அங்குமிங்கும் என ஓடியது. பல எருதுகள் கூட்டத்திற்குள் புகுந்து வேடிக்கை பார்த்த மக்களை முட்டி மோதி தள்ளி கூட்டத்தை கலந்துபோக செய்தது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையிலும், வெளியூரை சேர்ந்த இளைஞர்கள் பலரும் கிராமத்திற்கு வந்து எருதாட்டத்தில் கலந்துகொண்டனர். இதில், காளைகள் தூக்கி வீசியதில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com