விவேகானந்தர் நினைவு மண்டபம்- திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து

கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் நேரில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரை பகுதி மணல் பரப்பாக காட்சியளிப்பதை காணலாம்
முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரை பகுதி மணல் பரப்பாக காட்சியளிப்பதை காணலாம்
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில்133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.

இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

இன்று காலை 8 மணி முதல் வழக்கம்போல் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வந்தன.

திடீரென காலை 9 மணி அளவில் கடல் நீர்மட்டம் “திடீர்” என்று தாழ்வானது. இதை தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்தில் இருந்த அனைத்து சுற்றுலா பயணிகளும் படகு மூலம் அவசர அவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதனால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் நேரில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com