சென்னையில் மீண்டும் இன்ப அதிர்ச்சி: மருந்து கடை ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட்

தேனாம்பேட்டையில் உள்ள மருந்து கடை ஒன்றில் பணிபுரிந்து வருபவர் முகமது இத்ரிஸ். வங்கி ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாகவே தவறுகள் நடக்கின்றன.
சென்னையில் மீண்டும் இன்ப அதிர்ச்சி: மருந்து கடை ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட்
Published on

சென்னை:

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் டிரைவர் ஒருவரின் வங்கி கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடியை தனியார் வங்கி தவறுதலாக செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மருந்து கடை ஊழியர் ஒருவருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அவரது வங்கி கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

தேனாம்பேட்டையில் உள்ள மருந்து கடை ஒன்றில் பணிபுரிந்து வருபவர் முகமது இத்ரிஸ். கோட்டக் மகேந்திரா வங்கி கிளையில் இவர் கணக்கு வைத்து உள்ளார்.

இந்த நிலையில் இவரது வங்கி கணக்கில் ரூ.753 கோடி ரூபாய் திடீரென டெபாசிட் ஆகியுள்ளது. இது தொடர்பாக அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முகமது இத்ரிஸ் இது தொடர்பாக வங்கியில் முறையிட உள்ளார். இவ்வளவு பெரிய தொகை வங்கியில் டெபாசிட் ஆகியிருப்பது தொடர்பாக முகமது இத்ரிஸ் கூறியதாவது:-

எனது வங்கி கணக்கில் ரூ.753 கோடி பணம் வரவு வைக்கப்பட்டிருப்பதை இன்று காலையில்தான் நான் பார்த்தேன். அது எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. பணம் வந்த சிறிது நேரத்திலேயே, எனது வங்கி கணக்கை முடக்கி வைத்து உள்ளனர்.

வருமான வரி பிரச்சனை ஏதும் வந்துவிடக்கூடாது என்பதால் வங்கியின் இலவச தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டேன்.

ஆனால் இணைப்பு கிடைக்கவில்லை. எனவே வங்கியில் நேரில் சென்று புகார் அளிக்க உள்ளேன். வங்கி ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாகவே இதுபோன்ற தவறுகள் நடக்கின்றன. எனவே அவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோட்டக் மகேந்திரா வங்கியில் இருந்து தஞ்சையில் நேற்று வாடிக்கையாளர் ஒருவரின் வங்கி கணக்கில் ரூ.756 கோடி தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com